தேவையான பொருட்கள் : கோதுமை மாவு (வறுத்த கோதுமையில் அரைத்த மாவு,கோதுமை இடியாப்பம் செய்முறையில் அதை வறுக்கும் முறை கூறியுள்ளேன் ) உப்பு சர்க்கரை தேங்காய்த் துருவல்
செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து,சுடுதண்ணீர் விட்டு,இடியாப்பத்திற்கு போல பிசைந்து கொள்ளவும்.
அந்த மாவை சிறிது எடுத்து உருண்டை உருட்டி,தட்டிக்கொள்ளவும் (புகைப்படத்தில் உள்ளது போல)
அதில் சர்க்கரை,தேங்காய்த்துருவல் வைத்து தட்டியதை மடக்கி ஓரங்களை மூடி விடவும்.
இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும். சூடா ஆவி பறக்க கோதுமை கொழுக்கட்டை ரெடி .....
பசங்களுக்கெல்லாம் விடுமுறை தினமான இப்பொழுது மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யணுமா??? சத்தான,சுவையான,எளிமையான, வித்தியாசமான இந்த கொழுக்கட்டை செய்து கொடுங்க..... குறிப்பு : இதை வறுத்த கோதுமையில் அரைத்த மாவில் தான் செய்ய வேண்டும். இந்த மாவு அரைத்து வச்சுகிட்டா எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம்,கொழுக்கட்டை செய்து சாப்பிடலாம். வாழ்க வளமுடன்....
தேவையான பொருட்கள்: பிரண்டை -2 கட்டு புளி - 2 பெரிய நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் கெட்டியாக கரைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்) மசாலாப்பொடி(மல்லி &மிளகாய் கலந்த பொடி)-காரத்திற்கு( 3 மே.கரண்டி சேர்த்துள்ளேன்) உப்பு -தே.அளவு தாளிக்க : நல்லெண்ணெய் -2குழிக்கரண்டி வெந்தயம் -1தே.கரண்டி கருவேப்பிலை -தாளிக்க தே.அளவு சின்ன வெங்காயம்-1கப் பூண்டு -1கப் தக்காளி -3 (நறுக்கியது) அரைக்க: தேங்காய் -1/2கப்(கொஞ்சம் போட்டாலே போதும்) சோம்பு -1தே.கரண்டி சின்னவெங்காயம்-6
செய்முறை: பிரண்டையை மேல் தோல் எடுத்துட்டு சுத்தம் செய்து கட் பண்ணி வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,பிரண்டையை போட்டு நன்கு வதக்கவும்.(பிரண்டையை நல்லா வதக்கினால் தான் நாக்கில் அரிப்பு வராது,பிரண்டை வதக்கும் போது நிறம் மாறும்)
பின் மசாலாப்பொடி சேர்த்து 1/2நிமிடம் வதக்கி,உப்பு,மஞ்சள்தூள் போட்டு,அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 1நிமிடம் வதக்கி,புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.
கொதி வந்தவுடன் மிதமான தீயில் வைத்து பிரண்டை வேகவிடவும். பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து, பிரண்டை வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சாதம்,இட்லி,தோசை ஆகியவற்றிக்கு பிரண்டைக்குழம்பு சூப்பராக இருக்கும்.மறுநாள் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.
கோதுமை இடியாப்பம்,எல்லோரும் சாப்பிட்டிருப்பீர்கள்,எங்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.எளிமையாக செய்யக்கூடியது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த,சத்தான ஆகாரம் இது !!!! சுவையான,வாசனையான கோதுமை இடியாப்பம் சாப்பிடலாமா ?????
செய்முறை: கோதுமையை வாணலியில் வறுத்து,ஆறியபின் மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு மாவை எடுத்து,உப்பு போட்டு சுடுதண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல(கொஞ்சம் தளர்வாக பிசைந்தால் இடியாப்பம் பிழிய எளிமையாக இருக்கும்) பிசைந்து கொள்ளவும்.மாவு பிசையும் போதே நல்லா வாசனையாக இருக்கும்.
இடியாப்பத் தட்டில் எண்ணெய் தடவி, இடியாப்ப உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து,இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும். வேகும் போதும்,வாசனை கமகமக்கும்.
இடியாப்பம் வெந்தவுடன் தேங்காய் துருவல்,நெய்,சர்க்கரை போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வாழைப்பழம்,தேங்காய் துருவல் சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு : கோதுமை வறுக்கும் போது,பொன்னிறமாக வறுக்கவும்(கருக்கி விடக்கூடாது ) வாணலியில் வறுத்து,மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து வைத்துக்கொண்டால் எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம் செய்யலாம்.
இந்த குழம்பு எங்க வீட்ல ரொம்ப பிடிக்கும்....அடிக்கடி செய்வேன்// அது எப்படினு உங்களுக்கும் சொல்றேன்.... வாழைப்பூ பிரிக்கும் போது பெரிய,நடுத்தர,சிறிய பூக்களை பிரித்து,அதில் நடுத்தர,சிறு பூவை வைத்து இந்த குழம்பு செய்தா நல்லா இருக்கும்,பெரிய பூவை எடுத்து சுத்தம் செய்து வைங்க,அதுக்கு இன்னொரு ரெசிபி தயாரா இருக்கு அத செய்யலாம் ஓகே வா ...
தேவையான பொருட்கள் :
வேக வைத்த வாழைப்பூ -1கப்
வெங்காயம்(சிறியது )-18
தக்காளி -1கப்
பூண்டு -10
பச்சை மிளகாய் -1
கருவேப்பிலை -1/2பிடி
வெந்தயம் -1/4தே .கரண்டி
சோம்பு -1தே.கரண்டி
மசாலாப்பொடி(மிளகாய்&மல்லிகலந்தபொடி)-2மே.கரண்டி (காரத்திற்கேற்ப சேர்த்து கொள்ளவும்) மஞ்சள்பொடி-1/4தே.கரண்டி உப்பு -தே.அளவு எண்ணெய் -தாளிக்க தே .அளவு நல்லெண்ணெய் -1மே .கரண்டி
செய்முறை : வாழைப்பூவை சுத்தம் செய்து,உப்பு சேர்த்து குக்கரில் 3விசில்விட்டு வேகவைத்து,தண்ணீரை வடிகட்டி பூவை எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம்,சோம்பு போட்டு பொரிந்தவுடன் கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம்,பூண்டு(முழுசா) போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி (தக்காளி நன்கு வதங்கி கூழ் போல வர வேண்டும்),பின்பு வேக வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து 5நிமிடம் கிளறவும்.
இப்பொழுது மசாலாப்பொடி,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து 3நிமிடம் கிளறி,1+1/2 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து 15நிமிடம் கொதிக்க விட்டு(மிதமானதீயில்)எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.
சாதத்திற்கு,தோசைக்கு இந்த வாழைப்பூ குழம்பு சூப்பராக இருக்கும். குறிப்பு : புளிப்பு சுவைகொஞ்சம் அதிகம் தேவைப்பட்டால்,பெருநெல்லிஅளவு புளியை கெட்டியாக கரைத்து,நல்லெண்ணெய் விட்டவுடன் புளிக்கரைசலை சேர்த்து எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும். வாழ்க வளமுடன் ...
வெந்தய கீரை பற்றி நான் அறிந்த தகவல்களில் சில... புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் உடலுக்கு நல்ல பலம் தரும் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய கீரையின் கசப்பினால்,சிலருக்கு அது பிடிக்காது. நல்லது கசக்கத்தானே செய்யும்... அந்த கசப்பு தெரியாமல் இருக்க, சில வகையறாக்கள் சேர்த்து குழம்பு செய்து பார்த்தேன் ,நன்றாக வந்தது. கசப்பில்லா வெந்தய கீரை குழம்பு இதோ உங்களுக்கும்.....////
அரைக்க : சோம்பு-1/2தே .கரண்டி பெருங்காயம் -1/4தே.கரண்டி தக்காளி -2 புளி -சிறு நெல்லிக்காய் அளவு தேங்காய் துருவல்-3மே.கரண்டி வெல்லம் -சிறு துண்டு(சிறு நெல்லிக்காய் அளவு) மிளகாய்ப்பொடி(மல்லி,மிளகாய் கலந்தது)-2 மே.கரண்டி (காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும்) உப்பு-தே.அளவு
செய்முறை : கடாயில் நல்லெண்ணெய்விட்டுகாய்ந்தவுடன் ,கடுகு,உளுந்து,சீரகம், மிளகு,கருவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
பின் வெங்காயம்,பூண்டு,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.கடைசியாக அரிந்த கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த கலவையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி,2 டம்ளர் தண்ணீர் விட்டு நல்லா கொதி வந்தவுடன் விளக்கெண்ணை விட்டு,அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும்.இடையிடையே நன்கு கிளறிவிடவும்,எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்..
சூடான சாதத்துடன் குழம்பு விட்டு அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ சுவை!!!!!!!! வாழ்க வளமுடன் ....
இடியாப்ப சிக்கல எடுக்க ரூம் போட்டு யோசித்தப்ப எனக்கு கிடைத்த தீர்வு தான் இது... ஹீ ஹீ ஹீ ////
தேவையான பொருட்கள் : இடியாப்பம் -8(உதிர்த்தது) வெங்காயம் (பெரியது )-2(நறுக்கியது ) தக்காளி -3(பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் -2(கீறியது ) இஞ்சி -1 இன்ச் பூண்டு -3 கருவேப்பிலை -1/2 கைப்பிடி கொத்தமல்லி (அரிந்தது )-1/4 கப் கடுகு -1/4 தே.கரண்டி உளுந்து -1/4 தே .கரண்டி சோம்பு-1/4 தே.கரண்டி மிளகாய்த்தூள் -1/4 தே.கரண்டி கரம் மசாலாத்தூள் -1/2 மே .கரண்டி எண்ணெய் -தாளிக்க தே .அளவு உப்பு -தே .அளவு
செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு ,கடுகு ,உளுந்து ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் . பின் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு (தட்டியது )போட்டு வதக்கி(வெங்காயம் நன்கு வதங்க சிறிது உப்பு சேர்க்கவும்),தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள் ,கரம் மசாலாத்தூள்,உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனவுடன்,அடுப்பை அணைத்து விட்டு, இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கிளறி ,கொத்தமல்லி செய்து பரிமாறவும் ... தேங்காய் சட்னி (அ )ஆனியன் ரெய்த்தாவுடன் சாப்பிடலாம் ///////
நீண்ட இடைவேளைக்கு பிறகு, இந்த ஆண்டின் என் முதல் பதிவு ... அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (தாமதமான ).... எளிமையான,எனக்கு மிகவும் பிடித்த பஜ்ஜி இது. இதோ உங்களுக்கும்... தேவையான பொருட்கள்: பிரட் -4 (இரண்டாக கட் செய்யவும் ) பஜ்ஜி மிக்ஸ் -தேவைக்கு ஏற்ப எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
செய்முறை: கட் செய்து வைத்துள்ள ப்ரடை, தண்ணீர் விட்டு கரைத்து வைத்துள்ள மிக்ஸில் தோய்த்து,உடனே எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். (இரு புறமும் வெந்தவுடன் எடுக்கவும் )
தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை,சுடசுட அப்படியே சாப்பிடலாம்...
குறிப்பு: எனக்கு பஜ்ஜி மாவுக்கு எவளோ அரிசி மாவு ,கடலைமாவு சேர்க்கணும்னு தெரியாது,அதான் பஜ்ஜி மிக்ஸ் உபயோகப்படுத்தியுள்ளேன். அளவு தெரிந்தால் பதியவும் ...